Raja Rani Vimarsanam in Tamil

PUBLISHED DATE : 29/Sep/2013

Raja Rani Vimarsanam in Tamil

ராஜா ராணி  விமர்சனம்

கோவை ஆவி


இன்ட்ரோ  

நஸ்ரியாவின் நடிப்பில் வந்திருக்கும் இரண்டாவது தமிழ்ப்படம். இந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் மூவி இதுதான் என்று சொன்னால் மிகையல்ல. நஸ்ரியாவின் தீவிர ரசிகன் என்ற முறையில் இதை நான் சொல்லவில்லை. நஸ்ரியாவின் "அழகான" நடிப்பைத் தாண்டி ஒரு நல்ல திரைக்கதை, இசை, நகைச்சுவை, ஜெய் மற்றும் நயன்தாராவின் நடிப்பு என பல விஷயங்கள் அசத்தலாக அமைந்திருக்கிறது.. முதல் படத்திலேயே சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனர் ஷங்கரின் சிஷ்யர் அட்லீக்கு ஒரு ஷொட்டு.. சரி கதைக்கு வருவோம்.

 

கதை  

இஷ்டமில்லாத இருவர் மனம் ஒவ்வாது வாழ்க்கை துவங்க, இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள எத்தனிக்கையில் சந்தர்ப்ப வசத்தால் பிரிய நேரிடுகிறது. இவர்களை சேர்த்து வைப்பது யார் என்பது படத்தின் கிளைமாக்ஸ். மௌனராகம் என்றொரு திரைப்படம் பார்த்தது நினைவில் உள்ளதா? அந்தப் படத்தில் கொஞ்சம் நகைச்சுவை, இன்னொரு காதல், ஜீவி யின் இசை, மோகன்-ரேவதிக்கு பதில் ஆர்யா-நயன். சில்லென வந்து செல்லும் கார்த்திக் போல இதில் நஸ்ரியா. இதனுடன் நான் சற்றும் எதிர்பார்க்காத விருந்து ஜெய்யின் நடிப்பு. முன்பாதியில் சத்யனும், படம் நெடுக சந்தானமும் கலக்கல்.

                                                                                                                                       
ஆக்க்ஷன் 

படத்தின் எதார்த்த ஹீரோ ஜெய். மனிதர் வெள்ளந்தியான கேரக்டரில் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஜெய்க்குள் இவ்வளவு திறமை உள்ளதா என்று ஆச்சர்யப்பட்டேன். கால் சென்டரில் நயனிடம் திட்டு வாங்குவதாகட்டும், அவரிடம் காதல் சொல்லி பின் லவ்வுவதாகட்டும் செம்ம ஆக்டிங். "நான் அழுவல, கண்ணுல வேர்க்குது" என்று அவர் சொல்லும்போது அரங்கமே அதிர்கிறது. படம் முடிந்த பின்னும் மனதில் நிற்கிறார். இவருடன் சேர்ந்து சத்யன் செய்யும் சேட்டைகள் பிரமாதம்.ஆர்யா இன்னும் நடிப்பில் பாஸ்மார்க் வாங்கவே கஷ்டப் படுகிறார். காமெடி சீன்களில் ஒக்கே, கொஞ்சம் சீரியசான சீன்களில் ஸ்பூப் படங்களில் நடிப்பது போலவே வந்து போகிறார்.
 

நயன்தாரா "மஸ்காரா" போட்ட மங்காத்தாவாக படம் முழுவதும் வருகிறார். இவர் ஒவ்வொருமுறை அழும் போதும் மஸ்காரா கரைந்து முகத்தில் வழிந்து பப்பி ஷேமாக இருக்கிறது. ஆனால் இரண்டு வருடத்திற்கு பின் திரும்ப வரும் அவர் அசத்தல் பெர்பாமன்ஸ் என்றே கூறலாம். சந்தானம் படத்திற்கு தேவையான அளவில் மட்டும் காமெடி செய்வது சிறப்பு. அதுவும் இவரும் மானேஜர் "மொட்டை" ராஜேந்திரனும் சேர்ந்து செய்யும் காமெடிகள் கிச்சுகிச்சு. "தங்கமீன்கள்" ராம் கேரக்டரை விட ஒரு படி மேல் போய் நடித்திருக்கிறார் சத்யராஜ். இவர் கேரக்டரை புரிந்து கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது.

 

அசத்தல் அறிமுகம்        

தமிழ் சினிமாவிற்கு நீண்ட காலத்திற்கு பின் ஒரு துறுதுறு ஹீரோயன். வேற யாரு நம்ம நஸ்ரியா தான். "ரிங்க ரிங்கா" பாடல் கேட்கும் போதே நமக்கு கால்கள் தாளம் போடும். நஸ்ரியாவை பார்க்கும் போது உள்ளம் துள்ளும். இந்த ரெண்டும் சேர்ந்தால்.. அருமையான அறிமுகமாகிறார்.  "பிரதர்" என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் சொல்கிறார். மேக்கப் அதிகமில்லாமல் தன் அழகாலும் இயல்பான நடிப்பாலும் கவர்கிறார், தன் குடும்பத்தை பற்றி சொல்லும்போது நம் கண்களும் குளமாகிறது. அந்தக் காட்சியிலும் வெறும் கிளிசரின் வழிய தேமே என்று அமர்ந்திருப்பது ஆர்யாவின் சிறப்பு.

 

இசை-இயக்கம்-தயாரிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தில் ஜி.வீ. பிரகாஷின் இசை பெரும்பங்கு வகிக்கிறது. பாடல்கள் பின்னணி இசை, தீம் மியூசிக் என எல்லாம் ஏ-ஒன். சக்திஸ்ரீ கோபாலன் பாடிய "அஞ்ஞாடே" பாடல் படத்தில் மிஸ்ஸானது மட்டும் கொஞ்சம் வருத்தம். பலமுறை பார்த்து பழகிய கதைதான் என்றாலும் தொய்வில்லாத திரைக்கதை நமக்கு ப்ரிஜ்ஜில் வைத்த ஐஸ்க்ரீம் போல் சுவையாக இருக்கிறது.  இளைஞர்கள் மட்டுமல்லாது குடும்ப ஆடியன்ஸையும் கவரும் வண்ணம் பல காட்சிகளை வைத்து வெற்றிப்பட இயக்குனர் வரிசையில் கடைசியில் சென்று நிற்கிறார் அட்லி. அடுத்தடுத்த படங்களில் முன்னணிக்கு வர வாழ்த்துகள்.

 

ஆவியை டச் செய்த காட்சி/பாடல்

"ஹே பேபி" பாடலில் ஆர்யா-நயன் இருவரும் அசையாமல் நிற்க  கண்ணாடியில் அவர்கள் மனசாட்சி சண்டை போடும் காட்சி மற்றும் பிரதர் என்றபடி நஸ்ரியா ஐஸ்க்ரீம் வாங்கி வரும் காட்சி. இமையே பாடல் நெஞ்சை உருக்குவதாய் இருந்தது. ஓடே ஓடே மற்றும் சில்லென மழைத்துளி இளமை துள்ளும் பாடல்கள். காலாண்டு விடுமுறையாதலால் எல்லோரும் குடும்பத்தோடு சென்று கண்டுகளிக்க வேண்டிய படம். காதலர்கள்/ கணவன்-மனைவிகள் பார்க்க வேண்டிய படம். நண்பர்கள் கூட்டமாக சென்று ரசிக்க வேண்டிய படம். 

User Comments